Wednesday, November 30, 2022

கொஞ்ச நேரம் இரு.

நித்தமொரு வானம், 
விருப்பமான 
வண்ணங்களில் வானவில் 
 அனுக்கமான அந்திமழைச்சாரல் .., 
 இதமான இளவேனில், 
மதிமயக்கும் மாலைத்தென்றல். 
கொஞ்ச நேரம் இரு. 
உன் இருப்பால் 
மட்டுமே சாத்தியம் இவையெல்லாம். 

நம் நினைவுகளை 
ஞாபக அடுக்குகளிலிருந்து 
தேடித் தருகிறாய், 
நானோ 
நிகழ்கால 
நிதர்சனமறியா 
நித்திரையில் இருக்கிறேன். 
கொஞ்ச நேரம் இரு. 
உன்னால் மட்டுமே முடியும் 
என்னை துயிலெழுப்பாமல். 

உனக்கு வேண்டுமானால் 
தெரியாமல் இருக்கலாம். 
 உனக்கான அன்பை 
ஒரு கோப்பையில் 
சேகரித்துக்கொண்டுதான் 
இருக்கிறேன். 
மனமுடைந்த நாட்களில் 
மட்டும் கொஞ்சம் 
திருடிக் கொள்கிறேன். 
கொஞ்ச நேரம் இரு. 
மீண்டும் நிரப்பி விட்டு 
சொல்லியனுப்புகிறேன். 

இன்னுமொரு சாதாரண 
பொழுதென கழிகின்றன 
உன் கணங்கள். 
 நானோ 
 சலனமூட்டும் உன்னுடனான 
 சந்திப்புகளை தவிர்க்கும் 
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன். 
 கொஞ்ச நேரம் இரு. 
பேசிப் பழகிக்கொள்கிறேன் உன்னோடு .