Saturday, July 18, 2009

நான்


நீ நீயாக இல்லாத
நாட்களில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..

Saturday, July 11, 2009

உன்..

உன் வெறுமை
ஏற்படுத்தும் கோபங்கள்
சற்றென கொல்லப்படுகின்றன.

சூழ்நிலைக் கூச்சல்கள்
குற்றமாய்த் தெரியவில்லை.

தனிமையின் அதிர்வுகள்
ஏனோ அந்நியப்படுத்துவதில்லை.

இன்னும் இருக்கின்றன
நீ விட்டுச்சென்ற
உன் நிமிடங்கள்.

Wednesday, July 8, 2009

உன் நினைவுகளற்ற....

உன் நினைவுகளற்ற இரவுகளையும்
நீ வந்து போகாத கனவுகளையும்
வெறிச்சோடிப்போன
அதிகாலை வானம்
நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது...

நேற்றிரவு...


நேற்றிரவு
நண்பனொருவன்
சொல்லிச்சென்றான்
நீ நல்லவனாக இருப்பதே
பெரும் பிரச்சனையென்று...

Tuesday, July 7, 2009

யாருமல்லாத யாரையோ..

யாருமல்லாத யாரையோ

நாம் எல்லோரும்

பிரதிபலித்து வாழ்ந்துவருவதாக

நேற்றைய கனவில்

நான் நானுமல்லாத

என்னிடம் சொன்னேன்.

பிரியமற்றே....



பிரியமற்றே இருந்திருக்கின்றன

உன் வீட்டு நாய்க்குட்டியும்

என் வீட்டு நாய்க்குட்டியும்

நாம் பிரியப்போவதறிந்து...

Saturday, July 4, 2009

இன்னுமொரு...


இன்னுமொரு
சாதாரண பொழுதென கழிகின்றன
உன் கணங்கள்.
நானோ
சலனமூட்டும் உன்னுடனான
சந்திப்புகளை தவிர்க்கும்
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன்.

Friday, July 3, 2009

பொதுவாக...

பொதுவாக
முகம் தெரியாத மனிதர்களே
நாம் போகவேண்டிய
இடத்திற்கான வழி சொல்கிறார்கள்.

வார்த்தைகளற்ற...

வார்த்தைகளற்ற உன் மௌனங்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன் காதலை..
ஓயாமல் பேசினாலும்
உணர்த்த முடிவதில்லை என்னால்...