Wednesday, March 1, 2023

சாமியாடுதல்

 

குடிக்கார கணவனின் 
அடி உதை,
மாமியாரின் வசைச்சொற்கள்,
ஆண்டு முழுதுமன 
அயராத வேலைப்பளு,
திருவிழா தவறாமல்
அம்மன் வந்ததாய்
சாமியாடி தீர்த்து விடுவாள்
அம்மா

உன் கள்ளச்சிரிப்பில்

 சரணம்


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

நீ அங்கு நடக்க
நான் இங்கே விழுந்தேன்

நீ இல்லா இடத்தில்
நான் இறந்தே கிடந்தேன்

நீ வந்த நொடியில்
உயிர் பற்றி எழுந்தேன்


பல்லவி1

ஒரு வெட்ட வெளியில்
பட்ட மரமாய் 
நான் வீழ்ந்து கிடந்தேன்
ஒரு சொட்டும் மழையாய்
பட்டு தெறித்தாய்
நான் பூக்கள் விரித்தேன்
உயிர் பெற்ற மரமாய்!


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

நீ அங்கு நடக்க
நான் இங்கே விழுந்தேன்

நீ இல்லா இடத்தில்
நான் இறந்தே கிடந்தேன்

நீ வந்த நொடியில்
உயிர் பற்றி எழுந்தேன்

பல்லவி2

அந்த வானக்குடையில்
ஒரு நட்சத்திரமாய்
மின்னும் பொழுதில்
உன்னைக் கடந்தேன்
எந்தன் இரவு
இன்று பகலாய்
மாறிக் கிடக்க
நான் தூக்கம் தொலைத்தேன்


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

அரசன்


விழித்துப் பார்த்தால்
நாட்டின் அரசனாக இருக்கிறேன்,
பட்டாடை சகிதம்
பெரும் போஜனம் கிடைத்தது,
அடுத்ததாய் அமைச்சரவை கூட்டம்,
கஜானா நிலவரம் சரியில்லை,
அந்நிய நாட்டு அலப்பறை வேறு,
வரி வசூலிப்பு ஒன்றும்
பிரமாதமில்லை,
புதிதாய் கோவில் கட்ட வேண்டுமாம் 
ஆஸ்தான ஜோதிடர் அறிவுரை,

எதிரி நாட்டு அரசன்
போருக்கு ஓலை அனுப்பியுள்ளான்.

நான் கிளம்பிவிட்டேன்
பழைய வேலைக்கு
ஊதியம் குறைந்தாலும் 
பரவாயில்லையென்று