Wednesday, December 5, 2012

வேதியியல்



எங்கேனும் ஒளிந்திருக்க கூடும்
எல்லோருக்கும் தெரிந்த
நம்மால் ஒருபோதும்
உணரப்படாத
உனக்கும் எனக்குமிடையேயான 
வேதியியல்.

Tuesday, November 13, 2012

தீபாவளி

வருடம் ஒரு முறைக்கான
புது சட்டை,
அண்ணனுடன் பங்கு
பிரிக்கப் படும் பட்டாசு,
வீட்டு முன் குவியும்
பட்டாசுக் குப்பையின் பெருமிதம்,
ஆசிர்வாதம் அளிக்கும்
பத்து ருபாய் நோட்டுக்கள்,
இன்னுமிருக்கிறதா
அப்படியொரு தீபாவளி?

Friday, October 26, 2012

ஏன் வாழ்கிறோம்

எந்த மாதிரியான தேசத்தில்
வாழ்கிறோம் என்பதை விட
ஏன் வாழ்கிறோம் என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

நான் நானா ?

நாளை ஒரு நாள்
நான் பிறக்க கூடும்
என்ற நம்பிக்கையிலேயே...
தினம் தினம் ஒருவனாய்
என்னை சாகடிக்கிறேன்.

Monday, October 15, 2012

மனமுகம்


மனமுகம்
முகம் சற்றே அகோரமாய் 
மாறக் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
மனம் போகும் போக்கிலே 
முகம் மாறக் கடவதாய்
 கட்டளையிட்டுருப்பதாய் 
 சொல்லி சென்றான் 
 கடவுளரில் ஒருவன். 

Thursday, May 10, 2012

அழகு

தமது அழகு குறித்த
அவநம்பிக்கைகளை
அவ்வப்போது
தட்டி எழுப்புகிறது,
அழகு சாதன விளம்பரங்கள்.

Friday, May 4, 2012

மனமொழி

மனமொழி
------------------------------


ஆங்கிலம் இந்தி
என பிற மொழிகளை
என் மகளுக்கு
கற்பிக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறாள்
என் மனைவி.
மொழிகளை படிப்பதைக்
காட்டிலும்
மனங்களை படிப்பதே
அவசியம் என
எப்படி சொல்வது அவளிடம்?

குழந்தைகளின் உலகம்

குழந்தைகளின் உலகம்
------------------------------
நாம் செய்வதையெல்லாம்
செய்து காட்டும் கணத்திலிருந்து
தொடங்கி விடுகிறது,
அவளது எதிர்காலம்
குறித்த அச்சம்.

---------------------------------------------------------------------

குழந்தைகளின் உலகத்திற்கான
நுழைவாயிலில் அறிவிப்புப்பலகை
"பொய் பேசுபவர்களுக்கு இடமில்லை"
அதனாலோ என்னவோ
இன்னும் அது
அவர்களின் உலகமாய் இருக்கிறது.

Thursday, May 3, 2012

நம்பிக்கையின்மை

இரவுகளில்
லிப்ட் கேட்பவரை
தவிர்த்துச் செல்லும்போது
கோபம் கொள்கிறது மனது
நம்பிக்கையின்மையை 
கற்றுக்கொடுத்த 
இந்தச்சமூகத்தை நினைத்து..

கதைகள்

தூக்கம் வர

கதை சொல்ல சொல்லி

நச்சரிக்கிறாள் என் மகள்.

உண்மை தவிர்த்த

வெறும் கட்டு கதைகளாலேயே

இவளது எதிர்கால உலகம்

நிரம்பியுள்ளது என்பதறியாமல்.

Thursday, March 22, 2012

மதம்பிடித்த மானிடம்

ஆங்காங்கே ஒளிந்து கொள்கிறோம்
தன்னையே தனக்குள் வைத்து .
வீரனும் கோழையும்
அடித்துக் கொள்கிறார்கள் நமக்குள்.
உண்மை என்றொன்று
இல்லையென்பதே உண்மை.
வேறென்ன செய்ய
மதம்பிடித்த மானிடப் பிறவியை
பழிப்பதன்றி?
-மதுசூதனன்

Thursday, February 9, 2012

வார்த்தைகளற்ற வாஞ்சைகள்

இன்னும் அடைந்தே கிடக்கின்றன

அளப்பறியா அன்பும் பாசமும்.

உறுதிப்படுத்த உதாரணங்களே

இங்கே தேவைப்படுகின்றன.

வார்த்தைகளற்ற வாஞ்சைகளை

உணரும் மனங்கள்

மரித்து வருகின்றன

என்பதே உண்மை.